#6B8E23
"அ"
டாக்டர் இரா.நாகசாமி
27-Mar-2007
திருமழிசை ஆழவார் தாமது பாடல் ஒன்றில்
"கிடந்து இருந்து நின்று இயங்கும் போது நின்ன பொற்கழல்
தொடர்ந்து மீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி நல்க வேண்டுமே"
என்று பாடுகிறார். படுத்திருந்தாலும், அமர்ந்து இருந்தாலும், நின்று இருந்தாலும் சென்று கொண்டிருந்தாலும் உன்னுடைய பொற்கழல்களையே தொடர்ந்தும் அதனையே எப்பொழுதும் மீளாது தொடர்ந்து இருக்கும் நிலையே எனக்கு அருள வேண்டும். என்கிறார்.
இங்கு உன்னுடைய பொற்கழல் என்னும் பொருளில் "நின்ன பொற்கழல்" என்று அச்சில் உள்ளது. இது அச்சுப்பிழையாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றும். "நின் பொற்கழல்" என்று இருந்தாலே போதும் அல்லவா? இதே போல மற்றும் ஒரு இடத்தில் "மால் பாதமே" என்பதற்க்கு பதிலாக "மால பாதமே" என்று அச்சாகி உள்ளது. இதுவும் அச்சுப்பிழையாக இருக்க கூடுமோ என்று கருதினால் அது தாவறில்லை.
சம்ஸ்க்ருத மொழியில் ஆறாம் வேற்றுமை உருபு "ஸ்ய" எனக் குறிக்கப்படும். ராமனுடைய அல்லது கிருஷ்ணனுடைய என்று குறிக்க "ராமஸ்ய" அல்லது "கிருஷ்ணஸ்ய" என வரும். இதே வேற்றுமை உருபு பிராகிருத மொழியில் "ஸ" அல்லது "அ" என வரும். "சாதவாஹனஸ" அல்லது "சாதவாஹனஅ" என வரும். சில சாதவாஹனர் காசுகளில் "வசிஷ்டிபுதஸ சாதவஹனஸ" என வந்துள்ளதைக் காண்கிறோம். புகழ் வாய்ந்த அசோகப் பேரரசனின் கல்வெட்டில் அவன் "தேவாநம்பியஸ" என அழைக்கப்படுகிறான். தேவானாம் பிரியனுடைய என்பது பொருள். சில காசுகளில் "அ" என்பதும் பயன்பட்டுள்ளது. தமிழில் பிராம்மி கல்வெட்டுகளில் "அ" என்பது ஆறாம் வேற்றுமை உருபாக வருகிறதைப் பார்க்கிறோம். "அந்தைஅ ஸுதன்" என வந்துள்ளது. இது அந்தையின் மைந்தன் என்ற பொருளில் வந்தது.
ஆதலின் "அ" என்பது சரியான சொல்லே. அச்சுப்பிழை அல்ல எனத் தெளியலாம். ஆறாம் வேற்றுமை உருபு "அ" என்பது பிராகிருதத் தொடர்பால் வந்தது எனவும் அறியலாம்.