pATal47 pATal46.html pATal47.html pATal48.html ஏரெழுபது மகாகவி கம்பர் 47. ஈற்றேறுஞ் சிறப்பு.
பொருளடக்கம் | 46. கருப்பிடித்தற் சிறப்பு. | 48. பசுங்கதிர்ச் சிறப்பு. | அகெடமி

பயிர்க்கதிரிற் பிடித்த கரு பாலானநிலைமாறி அரிசிவடி வத்தையடையுமாறு முதிர்ந்துவருதல், ஈற்றேறுத லெனப்படும். ஈற்றுஈன் என்ற பகுதியினடியாப் பிறந்த தொழிற்பெயர். 47. ஈற்றேறுஞ் சிறப்பு. ஏற்றேறு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள் மாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும் ஊற்றேறுங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலி ஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே. (இ—ள்.) ஊற்று ஏறும் — ஊற்றுத் தோன்றப்பெற்ற, குலம் — சிறந்த, பொன்னி — காவேரிகதி, உறை — (பாய்ந்து) தங்கப் பெற்ற, நாடர் — சோணாட்டு வேளாளர், இடும் — பயிரிட்ட, சாலி செந்நெல், ஈற்று ஏறும்போது — ஈற்றேறுகையில், —ஏறு ஏறும் அரன் — இடபத்தை வாகனமாகக்கொண்டு ஏறிநடத்துகின்ற சிவ பெருமானுடைய, சிறப்புக்கு — திருவிழாவுக்கு, எழில் — அழகானது, ஏறும்; [சிவபெருமானது உத்ஸவங்கள் சீராக நடைபெறுமென்றபடி]; மகத்து அழல்கள் — (அந்தணர்கள் செய்யும்) வேள்வித் தீக்கள், மாற்று ஏறும் — மேன்மைபெற்று நிற்கும்: அரசர் முடி — அரசர்களின் அரசாட்சி, வளர்ந்து ஏறும் — சிறப்புற்று நடைபெறும்; வளமை மிகும் — (இவ்வுலகத்திற்) செழிப்பு மிகும்; கலி — வறுமையோ, ஈடு ஏறமாட்டாது — நிலைபெற்றிராது (தொலைந்துவிடும்); (எ - று.) தேவர், மானுடர் என்ற யாவரும் மேன்மைபெற்று விளங்குவது, பயிர் ஈற்றேறினால்தான் என்பது கருத்து. மகம் — யாகம்; வடசொல். மகம் தழல்கள் என்றும் பிரிக்கலாம். காருகபத்தியம், ஆகவநீயம், தட்சிணாக்கினி என வைதிகாக்கினி மூவகைப் படுதலால், “அழல்கள்” என்றது. ஈற்றேறும்போது அரன் சிறப்புக்காக [விசேஷ உத்ஸவத்திற்காக) வளர்க்கப்படுகின்ற எழிலேறுகின்ற மகத்தழல்கள் மாற்றேறும்; அரசர் முடியானது வளர்ந்தேறும் எனக் கூறினுமாம். “வளமைமிகும்” என்ற தொடரை ஊற்றுக்கு விசேஷணமாக்கி யுரைக்கவுமாம். அரன் = ஹரன்; அழித்தற் கடவுள். — (47)
பொருளடக்கம் | 46. கருப்பிடித்தற் சிறப்பு. | 48. பசுங்கதிர்ச் சிறப்பு. | அகெடமி